தானியக் காணிக்கை
14“ ‘தானியக் காணிக்கையின் ஒழுங்குமுறைகள் இவையே: ஆரோனின் மகன்கள் யெகோவாவிடம் பலிபீடத்துக்கு முன்பாக அதைக் கொண்டுவர வேண்டும். 15ஆசாரியன் தானியக் காணிக்கையிலுள்ள நறுமணத்தூளுடன் சேர்த்து, ஒரு கைப்பிடி சிறந்த மாவையும் எண்ணெயையும் எடுக்கவேண்டும். அந்த ஞாபகார்த்தப் பங்கை யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும். 16அதன் மீதியானதை ஆரோனும் அவன் மகன்களும் சாப்பிடவேண்டும். ஆனால் அதை ஒரு பரிசுத்த இடத்திலே, புளிப்பில்லாததாகச் சாப்பிடவேண்டும். அவர்கள் அதைச் சபைக்கூடார முற்றத்தில் சாப்பிடவேண்டும்; 17ஆனால் அது புளிப்பு சேர்த்துத் தயாரிக்கப்படக் கூடாது. எனக்கு நெருப்பினால் செலுத்தப்பட்ட காணிக்கைகளில், அவர்களுடைய பங்காக நான் அதை அவர்களுக்குக் கொடுக்கிறேன். பாவநிவாரண காணிக்கையைப் போலவும், குற்றநிவாரண காணிக்கையைப் போலவும் இதுவும் மகா பரிசுத்தமானது. 18அதை ஆரோனின் சந்ததிகளில் ஆண்மகன் எவனும் சாப்பிடலாம். தலைமுறைதோறும் நெருப்பினால் யெகோவாவுக்குச் செலுத்தப்படுகிற காணிக்கைகளில், இதுவே அவனுடைய நிரந்தரமான பங்காக இருக்கும். இவற்றைத் தொடும் எதுவும் பரிசுத்தமாகும்’ ” என்றார்.
19யெகோவா தொடர்ந்து மோசேயிடம் சொன்னதாவது, 20“ஆரோனும் அவன் மகன்களும் தாங்கள் அபிஷேகம் பண்ணப்படுகிற நாளிலே யெகோவாவுக்குக் கொண்டுவரவேண்டிய காணிக்கை இதுவே: ஒரு எப்பா அளவான சிறந்த மாவில் பத்தில் ஒரு பங்கை தானியக் காணிக்கையாக காலையில் அரைப்பங்கையும், மாலையில் அரைப்பங்கையும் கொண்டுவர வேண்டும். 21அதை எண்ணெயுடன் சேர்த்து, இரும்பு வலைத்தட்டியில் தயாரிக்க வேண்டும். நன்றாகப் பிசைந்து தயாரித்த அதைத் துண்டுகளாக நொறுக்கி, யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் நறுமணமான தானியக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும். 22ஆரோனுக்குப்பின் அவனுடைய இடத்தில் அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியனாக வரப்போகும் அவனுடைய மகனே அதைத் தயாரிக்க வேண்டும். இது யெகோவாவினுடைய நிரந்தரமான பங்கு. அது முழுவதும் எரிக்கப்படவேண்டும். 23ஆசாரியனின் எல்லா தானியக் காணிக்கையும், முழுவதுமாய் எரிக்கப்படவேண்டும். அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.”


