விபசாரத்தைக் குறித்து எச்சரிக்கை

20என் மகனே, உன் தகப்பனின் கட்டளைகளைக் கைக்கொள்,

உன் தாயின் போதனையை விட்டுவிடாதே.

21அவற்றை எப்பொழுதும் உன் இருதயத்தில் வைத்துக்கொள்;

அவற்றை உன் கழுத்தில் கட்டிக்கொள்.

22நீ நடக்கும்போது அவை உனக்கு வழிகாட்டும்;

நீ தூங்கும்போது, அவை உன்னைக் கண்காணிக்கும்;

நீ விழித்தெழும்பும்போது, அவை உன்னோடு பேசும்.

23ஏனெனில் இந்த கட்டளைகள் ஒரு விளக்கு,

இந்த போதனை ஒரு வெளிச்சம்,

நற்கட்டுப்பாடும் கண்டித்தலும்

வாழ்வுக்கு வழி.

24இவை ஒழுக்கங்கெட்ட பெண்ணிடமிருந்தும்,

விபசாரியின் இனிய வார்த்தைகளிலிருந்தும் உன்னை விலக்கிக் காக்கும்.

25நீ உன் இருதயத்தில் அவளுடைய அழகின்மேல் இச்சை கொள்ளாதே;

அவள் கண்கள் உன்னைக் கவருவதற்கு இடங்கொடாதே.

26ஏனெனில் விபசாரி, ஒரு துண்டு அப்பத்தைத் தேடி அலையும் நிலைக்கு உன்னைக்கொண்டு வருவாள்;

பிறரின் மனைவி உன் உயிரையே சூறையாடுவாள்.

27ஒருவன் தன் உடைகள் எரியாமல்

தன் மடியில் நெருப்பை அள்ளி எடுக்கமுடியுமோ?

28அல்லது தனது பாதங்கள் எரியாதபடி,

ஒருவனால் நெருப்புத்தழலில் நடக்க முடியுமோ?

29அவ்வாறே இன்னொருவனின் மனைவியுடன் உறவுகொள்பவனும் இருக்கிறான்;

அவளைத் தொடுபவன் எவனும் தண்டனை பெறாமல் தப்பமாட்டான்.

30ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது,

தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை.

31ஆனாலும் அவன் பிடிக்கப்பட்டால், அதை ஏழுமடங்காகக் கொடுத்தேத் தீரவேண்டும்;

அதற்கு அவன் வீட்டிலுள்ள செல்வங்களையெல்லாம் அவன் கொடுக்க நேரிடும்.

32ஆனால் விபசாரம் செய்பவனோ சுத்த முட்டாள்;

அப்படிச் செய்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்.

33அடிபட்ட காயமும் அவமானமும் அவனுடைய பங்கு;

அவனுடைய வெட்கம் ஒருபோதும் நீங்காது.

34ஏனெனில் பொறாமை கணவனின் மூர்க்கத்தைத் தூண்டும்;

பழிவாங்கும் நாளில் அவன் இரக்கம் காட்டமாட்டான்.

35அவன் எவ்வித இழப்பீட்டையும் ஏற்றுக்கொள்ளமாட்டான்;

எவ்வளவு பெரிய இலஞ்சமானாலும், அவன் அதை வாங்க மறுப்பான்.