Select a Verse

சங்கீதம் 81

கித்தீத் என்னும் இசைக்கருவியை வாசிக்கும் இராகத் தலைவனுக்கு ஆசாப் அளித்த பாடல்.

1நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாகப் பாடி,

யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள்.

2தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து,

பாட்டு பாடுங்கள்.

3மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும்,

நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள்.

4இது இஸ்ரவேலுக்குப் ஆணையும்,

யாக்கோபின் தேவன் விதித்த கட்டளையுமாக இருக்கிறது.

5நாம் அறியாத மொழியைக்கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படும்போது,

இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார்.

6அவனுடைய தோளைச் சுமைக்கு விலக்கினேன்;

அவனுடைய கைகள் கூடைக்கு விடுவிக்கப்பட்டது.

7நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்;

இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்திரவு அருளினேன்;

மேரிபாவின் தண்ணீர்கள் அருகில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா)

8என்னுடைய மக்களே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்;

இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாக இருக்கும்.

9உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்;

அந்நிய தேவனை நீ வணங்கவும் வேண்டாம்.

10உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்த உன்னுடைய தேவனாகிய யெகோவா நானே;

உன்னுடைய வாயை விரிவாகத் திற, நான் அதை நிரப்புவேன்.

11என்னுடைய மக்களோ என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடுக்கவில்லை;

இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை.

12ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்;

தங்களுடைய யோசனைகளின்படியே நடந்தார்கள்.

13ஆ, என்னுடைய மக்கள் எனக்குச் செவிகொடுத்து,

இஸ்ரவேல் என்னுடைய வழிகளில் நடந்தால் நலமாக இருக்கும்!

14நான் சீக்கிரத்தில் அவர்களுடைய எதிராளிகளைத் தாழ்த்தி,

என்னுடைய கையை அவர்கள் எதிரிகளுக்கு விரோதமாகத் திருப்புவேன்.

15அப்பொழுது யெகோவாவைப் பகைக்கிறவர்கள் அவருக்கு வஞ்சகம் பேசி அடங்குவார்கள்;

அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும்.

16செழுமையான கோதுமையினால் அவர்களுக்கு உணவளிப்பார்;

கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.